Wednesday, February 5, 2014

விமர்சனம் - 'செங்கதிர்'

கதைத்துவமும் கலைத்துவமும் கைகோர்க்கும் அபூர்வம்        

இரண்டாம் விசுவாமித்திரன்-இலங்கை                       
    
புலம்பெயர்ந்தோர் தமிழ் இலக்கியமானது உந்நதமான வகிபாகமொன்றினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. பல காரணிகள் இதற்கு உந்து சக்தியாக அமைந்துள்ளன. கற்பனையிலும் பார்க்க யதார்த்தமாக இலக்கியப் படைப்புகள் அமைந்து விடுவது இதில் முக்கியமானது.. நெஞ்சையழுத்தும் பாரங்களும் வெப்பிசாரங்களும் மரணபயங்களும் குண்டு வீச்சுகளும் புலம்பெயர்வுகளும் நிறைவேறாமலாகும் கனவுகளும் குழிதோண்டிப் புதைக்கப்படும் எதிர்காலங்களும் என்று அந்தப் படைப்புகளின் பேசுபொருட்கள் உயிரோட்டமானவை. இதனால் புனைவு இலக்கியங்கள் குறிப்பாக சிறுகதை வடிவம் புலம்பெயர்;தோர் தமிழ் இலக்கியப் படைப்புகளில் முதன்மை பெற்றவையாக விளங்கி வருகின்றன. அதற்கென வீச்சுமிக்க புதிய எல்லைகள் வரையப்படுகின்றன. அதன் முகப்பு சர்வதேசத்தை நோக்கியுள்ளது.
நான்கு தலைமுறைகாலமாக சளைக்காது எழுத்தூழியத்தில் ஈடுபட்டு தற்போது அவுஸ்திரேலியாவில் புலம் பெயர்ந்து வாழும் எஸ்.பொன்னுத்துரை அவர்கள் இந்திராபார்த்தசாரதி அவர்களையும் இணைத்துக் கொண்டு 1994இல் வெளியிட்ட 'பனியும் பனையும்' என்ற  சிறுகதைத் தொகுதிதான் முதன்முதலாக புலம்பெயர்ந்தோர் இலக்கியமாக அடையாளம் காணப்பட்டது. இதுபோலும் பணிகளினால் படைப்பிலக்கியம் ஈழத்தவர்களால் தலைமை தாங்கப்படுமென்ற கோசம் பயிலப்பட்டது.. தற்போது இதனை வலுவூட்டும்வகையில் அகில் அவர்களின் 'கூடுகள் சிதைந்தபோது' என்ற சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது .

அகில் எனவே அறியப்படும் அகிலேஸ்வரன் அவர்கள் இலங்கை யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1991இல் புலம் பெயர்ந்து இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் சில காலம் வாழ்ந்து தற்போது கனடாவில் வசிப்பவர். ஆன்மீகத் துறையில் ஈடுபட்டு 'நமது விரதங்களும்  பலன்களும்' 'இந்துமதம் மறைபொருள் தத்துவ விளக்கம்' ஆகிய  நூல்களை  எழுதியவர்.பின்னர் புனைவு இலக்கியத்தைத் தேர்ந்தவர். கட்டுரை, கவிதை, சிறுகதை, நாவல், நூல்ஆய்வு ஆகிய பணிகளில் ஈடுபாடு கொண்டவர். இவரது ஆக்கங்கள் இலங்கை, இந்தியா மற்றும் புலம்பெயர் நாடுகளில் வெளியாகும் பத்திரிகை, சஞ்சிகைகளிலும் சில இணையத் தளங்களிலும் வெளியாகியுள்ளன. 'திசை மாறிய தென்றல்' 'கண்ணின்மணி நீயெனக்கு' ஆகிய இரு நாவல்களையும் 'மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு' என்ற குறுநாவலையும் வெளியிட்டவர். 'கூடுகள் சிதைந்தபோது' என்ற இச்சிறுகதைத் தொகுதிக்காக பல தரப்பினரிடமிருந்து பரிசுகளும் பாராட்டுக்களும் பெற்றவர்.ஊடகவியலாளராகவும் புனைகதையாளராகவும் நன்கு அறியப்பட்ட அகில் அவர்கள் தற்போது WWW.TAMILAUTHORS.COM என்ற இணையத்தளத்தினூடாக மேலெழுந்து தமிழ் இலக்கிய உலகினருடன் தொடர்ந்தும் தொடர்பிலிருப்பவர்.
இத்தொகுதியில் மொத்தம் பதினான்கு கதைகள் அடக்கம். அவை வாழ்வின் யதார்த்தங்களைத் துல்லிமாகப் படம் பிடிப்பன. அனைத்துக் கதைகளும் ஏதோவொருவகையில் சமூக முக்கியத்துவ மையத்தை நோக்கியவை. போரியல் வடு, சாதிய எதிர்ப்புணர்வு. உயிர்களின் சமத்துவம், செல்வாக்கிழந்துவரும் முதுமை, குடும்ப வாழ்வின் சூட்சுமம் போன்ற கருத்தாடல்களினூடாக கதைகள் நகர்த்தப்படுகின்றன. புலம்பெயர் வாழ்வின் ஊடான பண்பாட்டு மாற்றமொன்றின் முகையவிழ்ப்பும் கதைகள் சிலவற்றின் தொனியாக உள்ளன.                                                                        
தொகுதியில் உள்ள கதைகளில் 'வலி' வாலாயமான போக்கிலிருந்து வேறுபட்டது. இதன் தளமும் தமிழுக்குப் புதிது. புலம்பெயர்ந்தபோது அனுபவித்த சித்திரவதைகள் மற்றும் உயிர்களின் சமத்துவம், அபுலால் உணவுமுறை என்று பன்மைத்துவக் கருத்துப் பாய்ச்சலாக இக்கதை அமைந்துள்ளது.
'கூடுகள் சிதைந்தபோது'  'கண்ணீர் அஞ்சலி'  'பெரிய கல்வீடு' ஆகியன போர்க்கால ஆக்கினைகளையும் அழிச்சாட்டியங்களையும் வௌ;வேறு தளங்களில்நின்று விளக்கும் கதைகள். மூன்றும் மூன்று வகைத்து. 'கூடுகள் சிதைந்தபோது'  தலைப்புக்கதை. ஒரு பறவையின் இறப்பில் அதன் இணையன் அடையும் தவிப்பை போர்க்கால புலம்பெயர்வின்போது தனது இளம் மனைவியை இழந்த துயரத்தோடு மீட்டிப் பார்க்கும் கதை. இக்கதையில் கதைத்துவமும் கலைத்துவமும் கைகோர்த்துச் செல்கின்றன..இவ்வாறே யுத்தத்தின் கோரமுகத்தை 'கண்ணீர் அஞ்சலி' என்ற கதை படம் பிடிக்கின்றது. தனது நாடு, தனது மண், தனது மக்கள் என்று மனித நேசிப்புகளோடு வாழ்ந்து புலம்பெயர மறுத்த ஒரு டாக்டருக்கு  மனைவியையும் ஒரேயொரு மகனையும் காப்பாற்ற முடியாத அவலம் கதையின் கருவாகின்றது. ஆபத்தில் உதவ முன்வராத குடும்ப உறவுமுறையை தூக்கி வீசுகின்றது 'பெரிய கல்வீடு' என்ற கதை. படைப்பாளனின் கதை சொல்லும் உத்தி இக்கதைகளுக்குக் கனதி சேர்க்கிறது.
'அம்மா எங்கே போகிறாய் ?' , 'இது இவர்களின் காலம்' , 'ஓர் இதயத்திலே'  'உறுத்தல்' ஆகியன புலம்பெயர் நாடுகளில் ஏற்பட்டுவரும் பண்பாட்டு மாற்றத்தைச் சொல்லும் கதைகள். உழைப்பையும் பண்பாட்டையும் கட்டிப் பிடித்துக் கொண்டு சீவியம் நடத்திய காலம்போய் இன்று அந்த வாழ்க்கையை புலம்பெயர் நாடுகளில் தொலைத்துவிட்டு அதன் பிரதிபலிப்புப் பிரதியீடுகளான மனப்போராட்டங்களையும் சவால்களையும் ஏற்று அவதியுறும் வாழ்வை  அடையாளம் காட்டும் கதைகள் இவை. புலம்பெயர்ந்த பின்னர் புதிய சூழ்நிலையில் இரண்டறக் கலந்து வாழ முயற்சிக்காமல் இன்னமும் பண்பாட்டுத் திமிரோடு வாழுதல் அவசியமா? என்ற கேள்வியை இக்கதைகள் பிரேரிக்கின்றன.
காலாவதியாகாமல் இன்னமும் புனைவுகளில் ஆதிக்கம் செலுத்தும் உள்ளடக்கங்களில்  சாதித்துவமும் ஒன்று. 'பெரிய கல்வீடு'  'வெளியில் எல்லாம் பேசலாம்' ஆகிய இரண்டு கதைகளில் இந்த விடயப் பொருள் எடுத்தாளப்பட்டுள்ளது. 'வெளியில் எல்லாம் பேசலாம்' என்ற கதையில்; 'சாதியென்றால் என்னவென்று கேள்விகேட்கும் புலம்பெயர்ந்தோரின் பி;ள்ளைகள்' என்று சொன்னதன்மூலம் சாதி வேறுபாட்டின் எதிர்கால இருப்பை கதைசொல்லி கேள்விக்கு உட்படுத்தியுள்ளார். மேலும் யுத்தப் பாதிப்புக்கு உள்ளான பிரதேசங்களில் புலம் பெயர்வு காரணமாக பல வீடுகள் அரைகுறைப் பாதிப்புக்களுடன் ஆட்கள் எவருமின்றிக் காணப்படுகின்றன. இவ்வாறான ஒரு வீட்டை மையமாக வைத்து 'பெரிய கல்வீடு' கதை பின்னப்படுகின்றது. இந்த வீட்டோடு உதவியாகவும் தொடர்பாகவுமிருந்த வேற்றுச் சாதிக் குடும்பமொன்று வேறுவழியில்லாமல் இந்த வீட்டைப் பயன்படுத்த முனைந்தபொழுது சாதியைக் காட்டி அதனைக் கையகப்படுத்த முனையும் உறவுகாரர்களைப் புறந்தள்ளி சாதிவேறுபாடு பாராமல் உதவி செய்தவர்களுக்கு சாதகமாகக் கதையை முடித்தமை இக்கதைக்குச் சிறப்புச் சேர்க்கின்றது. யுத்தகால விதைப்புகளின் அறுவடைதான் இதுபோன்ற   பெரிய கல்வீடுகள்.அவை இன்று ஆளில்லாமல் வெறுச்சோடிக் கிடக்கன்றன. இப்பிரச்சினைக்கு இக்கதை ஒரு தீர்வை முன்வைத்துள்ளது. அதன்மூலம் புலம்பெயர் இலக்கியத்தின் படைப்பு உபாயங்கள் வெறுமனே இரைமீட்டல்களாக மாத்திரம் நின்றுவிடாமல் நிகழ்காலப் பிரச்சினைக்கான எதிர்வினைகள் படைப்புகளினூடாகக் கொண்டுவரப்படவேண்டும் என்பதை இக்கதையின்மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
கணவன் மனைவி உறவின் மகோன்னத தரிசிப்பு 'ரேடியோப் பெட்டி' கதை. எனின் குடும்ப வாழ்வின் முரண் தோற்றத்தின் விளைவு 'தேடல்'என்ற கதை.. 'பதவி உயர்வு' என்ற கதை இனவிரோத மனப்பான்மையிலும் மானிடஉறவு மேதமையானது என நிறுவுகின்றது.  . யதார்த்த வாழ்வின் எல்லைகளை கைநீட்டிக் காட்டும் இக்கதைகள், சொல்லும் பாங்கினால் ஈர்ப்புப் பெறுகின்றன.
உருவம், உள்ளடக்கம், உத்தி என்பன மாத்திரம் ஒரு சிறுகதையின் மேன்மைக்குப் போதுமானதல்ல. படைப்பு மொழியும் பார்த்திர வார்ப்பும் சமமான பங்களிப்பினை வழங்க வல்லன. யதார்த்த வாழ்வின் பிரதிபலிப்புகள் இயல்பான மொழிப் பிரயோகத்தினால் மனித உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தி சாதிக்கவல்லவை என்பதை இத் தொகுதிக் கதைகள் நிறுவுகின்றன. 'கூடுகள் சிதைந்தபோது' கதை இதற்கான ஒரு பதச் சோறு எனலாம்.
உயிர்ப்புள்ள பாத்திரங்களும்  இத்தொகுதிக்குப் போசணை வழங்கியுள்ளன. விசாலாட்சி (அம்மா எங்கே போகிறாய்? ) , தங்கம் (பெரிய கல்வீடு) , கௌரி மற்றும் தீபா ( இது இவர்களின் காலம்) போன்ற பாத்திரங்களின் வாயிலாக அழியாத சோகங்களையும் விடுபட முடியாத ஏக்கங்களையும் பண்பாட்டுப் பெருமையினையும் எதிர்காலக் கனவுகளையும் விம்மலையம் பொருமலையும் நம்மால் அனுபவிக்க முடிகின்றது.  துயர வாழ்வின் இந்த அனுபவிப்புக்களை கதைகளின் வழியாக கலாநேர்த்தியோடு படைப்பாக்கிப் பகிர்ந்தளித்துள்ளார் அகில் அவர்கள்.
சிறுகதையுலகம்பற்றிய அவரின் புதிய எண்ணங்களினாலும் அதுதொடர்பிலான எத்தனங்களினாலும் புதிய தளங்களை அறிமுகம் செய்யும் பாங்கினாலும் சூழலில் இருந்து பெற்றுக் கொண்ட அனுபவங்களினாலும் சமூக முக்கியத்துவம் நோக்கிய தேடலாலும் வகைக்கொன்றும் வண்ணத்துக்கொன்றுமான வெளிப்பாடுகளாலும் உயிர்ப்புமிக்க மொழிநடையாலும்  'தனது சிறுகதைகளுக்காக நட்சத்திர அந்தஸ்துகோரி ஒரு பயணத்தை' ஆரம்பித்து வைக்கிறது  'கூடுகள் சிதைந்தபோது' சிறுகதைத் தொகுதி.


நன்றி  'செங்கதிர்'  - டிசம்பர் 2012
                   


No comments:

Post a Comment